Friday, April 27, 2012

ஏப்ரல் 29, 2012

பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 4:8-12
   அந்நாள்களில் பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு கூறியது: "மக்கள் தலைவர் களே, மூப்பர்களே, உடல் நலமற்றியிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லா ருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார். இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை."
இரண்டாம் வாசகம்: 1 யோவான் 3:1-2
   அன்பிற்குரியவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ள வில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கி றோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்: ஏனெனில் அவர் இருப்பது போல் அவரைக் காண்போம்.

நற்செய்தி வாசகம்: யோவான் 10:11-18
  அக்காலத்தில் இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுக ளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக் கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமி ருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்."

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, April 25, 2012

ஏப்ரல் 29, 2012

பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   நம் ஆயர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நல்லாயன் ஞாயிறை சிறப்பிக்கும் இன்றைய திருவழிபாடு இயேசுவை நமது ஆயராக ஏற்று, அவரது குரலுக்கு செவிகொடுக்கும் நல்ல ஆடுகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்காக உயிரைக் கொடுத்த நல்லாயர் இயேசுவுக்குரிய ஒரே மந்தையின் உறுப்பினர்களாக உலக மக்களை ஒன்றிணைக்க நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் அழைப்பை உணர்ந்தவர்களாய், கிறிஸ்து இயேசுவில் இணைந்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகம், இயேசுவின் பெயரால் கால் நலமடைந்தவரைப் பற்றிய செய்தியை நமக்கு தரு
கிறது. குணமடைந்தவரைச் சுட்டிக்காட்டி, 'இயேசுவே மக்கள் அனைவருக்கும் மீட்பராகவும், திருச்சபைக்கு மூலைக்கல்லாகவும் விளங்குகிறார்' என்று திருத்தூதர் பேதுரு சான்று பகர்கிறார். விலையுயர்ந்த மூலைக்கல்லாகிய இயேசுவோடு இசைந்த கட்டடமாக திருச்சபை வளர்ச்சி பெற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவன முடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், இயேசுவில் வெளிப்பட்ட கடவுளின் அன்பைப் பற்றிக்
கூறுகிறது. இயேசுவின் இணையற்ற தியாகத்தால் கடவுளின் பிள்ளைகளாகி இருக்கும் நாம், இறையாட்சியின் நாளில் கடவுள் இருப்பது போலவே அவரைக் காண்போம் என திருத்தூதர் யோவான் நமக்கு எடுத்துரைக்கிறார். கிறிஸ்து வழியாக கடவுளை அறிந்து கொண்ட நாம் அனைவரும், இறைமாட்சியைக் காணும் வரம் வேண்டி இந்த வாசகத் திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கள் நல்லாயராம் இறைவா,
  
உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த மந்தையாக இறைமக்களை உருவாக்க துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் வழிகாட்டியாம் இறைவா,
   உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து, தவறான கொள்கைகளையும் சமயங் களையும் பின்பற்றி வாழும் மக்கள், உண்மை கடவுளாகிய உம்மை ஏற்றுக்கொள்ளவும் உமது அரசில் ஒன்றிணையவும் அருள்புரிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் மேய்ப்பராம் இறைவா,
   எங்கள் நாட்டை வழிநடத்தும் அரசியல், சமூகத் தலைவர்
கள் அனைவரும் நீதியோடும், நேர்மையோடும் மக்களை உண்மையின் பாதையில் வழிநடத்தவும், உமது திருச்சபை இம்மண்ணில் வளர துணை நிற்கவும் உதவ வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் மருத்துவராம் இறைவா,
   உலகில் குடி, புகை, போதைப் பழக்கங்களாலும், சுயநலம், பேராசை, வன்மம் போன்ற தீய குணங்களாலும், தங்களையும் பிறரையும் அச்சுறுத்தி வருவோர்
அனைவருக்கும் உமது அருளால் குணமளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் மகிழ்வாம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது மந்தை யின் நல்ல ஆடுகளாகவும், உமக்கு சான்று பகரும் நல்ல கிறிஸ்தவர்களாகவும் வாழத் தேவையான நலன்களை எம்மில் பொழிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, April 20, 2012

ஏப்ரல் 22, 2012

பாஸ்கா காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 3:13-15,17-19
   அந்நாள்களில் பேதுரு மக்களை நோக்கிக் கூறியது: "ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட் டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சி கள். அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படி செய்துவிட்டீர்கள் என எனக்குத்தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புறவேண் டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறை வேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்."
இரண்டாம் வாசகம்: 1 யோவான் 2:1-5
   என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்க ளுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்க ளுக்கு கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக் கும் கழுவாய் அவரே.  அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். அவரை எனக்குத் தெரியும் எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளை கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 24:35-48
  அக்காலத்தில் சீடர்கள் இருவரும் எம்மாவு வழியில் நிகழ்ந்தவற்றையும் இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங் கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்ப தாய் நினைத்தார்கள். அதற்கு அவர், "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே" என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்ப முடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார் கள். அப்போது அவர் அவர்களிடம், "உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார். பின்பு அவர் அவர்களைப் பார்த்து, "மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்த போதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே" என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், 'பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெய ரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, April 18, 2012

ஏப்ரல் 22, 2012

பாஸ்கா காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உண்மைக்குரியவர்களே,
   உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவின் உயிர்ப்பின் அனுபவத்தை முழுமையாக உணரவும், ஆண்ட வரின் உயிர்ப்புக்கு உண்மையான சாட்சிகளாக வாழவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. உண்மையை ஏற்க மனதின்றி நாம் கலக்கம் அடையும் வேளையில், கடவுள் நமக்கு தெளிவை வழங்குகிறார். திருச்சட்டமும் இறைவாக்கினரும் முன்னறிவித்த மெசியா இயேசுவே என்பதை உணர்ந்து, அவரது சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், நமது பாவங்களைப் போக்குவதற்காக
கடவுளின் திட்டப் படியே மெசியாவாகிய இயேசு துன்புற்றார் என்பதை எடுத்துரைக்கிறது. இயேசு மக்களால் தீர்ப்பிடப்பட்டு கொல்லப்பட்டாலும், தந்தையாம் கடவுள் அவரை உயிரோடு எழுப்பிய தற்கு தாங்களே சாட்சிகள் என்று திருத்தூதர் பேதுரு மக்கள் முன்பு சான்று பகர்கிறார். இயேசுவின் உயிர்ப்பை பிற சமயத்தினரும் ஏற்கும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், அனைத்துலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக விளங்கி இறைத்தந்தையிடம் பரிந்துபேசுபவர் இயேசுவே என்று
எடுத்து கூறுகிறது. இயேசுவின் கட்டளைகளை கடைபிடிப்போரிடமே கடவுளின் அன்பு நிறைவடைகிறது என திருத்தூதர் யோவான் நமக்கு தெளிவுபடுத்துகிறார். ஆண்டவர் இயேசு கற்பித்த இறையன்பையும், பிறரன்பையும் நமது வாழ்வில் கடைப்பிடித்து, இறைவனில் நிறைவு காண வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. இரக்கத்தின் ஊற்றாம் இறைவா,
   
இயேசுவின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டு, உமது சாட்சிகளாக வாழ்ந்து வருகின்ற திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தால் புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மேன்மைமிகு அரசராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் பிற சமயத்தினர் முன்னிலையில் உண்மையின் சாட்சிகளாக வாழ்ந்து, உமது அரசைக் கட்டியெழுப்ப கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உதவ வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் உருவாம் இறைவா,
   எங்கள் நாட்டு தலைவர்களும், சமூகத் தலைவர்களும் மக்களிடையே அன்பை விதைக் கவும், வேற்றுமையை அகற்றவும், தீமைகளை வேரறுக்கவும் தேவையான 
மன உறுதி யினை அவர்களுக்கு வழங்க வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,
   பயங்கரவாதம், வன்முறை,
கலவரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் துன்புறும் மக்களிடையே, உமது அன்பின் சாட்சிகளாக வாழும் வரத்தினை கிறிஸ்தவர்கள் அனை வருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உண்மையின் நிறைவாம் இறைவா,
   உமது சாட்சியாக வாழ அழைக்கப்பட்டுள்ள எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், எங்கள் சொற்களாலும், செயல்களாலும் உமக்கு சான்று பகரும் வகையில் உமது தூய ஆவியால் எங்களை வழிநடத்த
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, April 13, 2012

ஏப்ரல் 15, 2012

பாஸ்கா காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 4:32-35
   அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந் தனர். தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இரண்டாம் வாசகம்: 1 யோவான் 5:1-6
   அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிட மிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்கு சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக் கும் அனைத்தும் உலகை வெல்லும்: உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத் தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.

நற்செய்தி வாசகம்: யோவான் 20:19-31
  அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள் மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர் களோ, அவை மன்னிக்கப்படா" என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்ட வரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணி களால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்க ளோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமா விடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.  வேறு பல அரும் அடையா ளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந் நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற் காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, April 11, 2012

ஏப்ரல் 15, 2012

பாஸ்கா காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
அன்புக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் இந்த திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கிறோம். நாம் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய இறை இரக்கத்தின் ஞாயிறு திருவழிபாடு இயேசுவின் உயிர்ப்பை காணாமலே நம்பவும், கடவுளின் அன்பைப் பிறரோடு பகிர்ந்து வாழவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் கடவுள் மீதே சந்தேகம் கொண்டாலும், நமது பலவீனத்தை உணர்ந்தவராய் அவர் நமக்கு உதவிசெய்ய வருகிறார் என்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. கிறிஸ் துவில் வெளிப்பட்ட கடவுளின் இரக்கம் நிறைந்த அன்பை நாமும் பிறரோடு பகிர்ந்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகம்,
தொடக்க கிறிஸ்தவர்களின் அன்பும் பகிர்தலும் நிறைந்த வாழ்வைப் எடுத்துரைக்கிறது. முதல் கிறிஸ்தவர்கள் அனைவரும் இறை அனுபவம் பெற்றவர்களாய், தங்கள் உடைமைகளை பகிர்ந்து வாழ்ந்தனர். மற்ற மக்களிடையே நற்பெயரும் பெற்றிருந்தனர். அவர்களைப் போன்றதொரு சாட்சிய வாழ்வு வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், அன்பு வாழ்வு வாழ்வதைப் பற்றி
குறிப்பிடுகிறது. அன்புசெய்து வாழ்வதே கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்து வாழும் வாழ்வு என்று அன்பின் திருத்தூதர் யோவான் நமக்கு எடுத்து கூறுகிறார். தூய ஆவியார் வழியாக இறைமகன் இயேசுவில் முழுமையான நம்பிக்கை கொண்டு, அன்பில் வளரும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,
   உம் திருமகன் இயேசுவின் உயிர்ப்பை காணாமலே நம்பி ஏற்றுக்கொண்டிருக் கும் திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உமது சாட்சிகளாக வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் வேந்தராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ வாழ்வின் உண்மையான பொருளை உணர்ந்தவர்களாய், தியாகமும் அன்பும் நிறைந்த வாழ்வால் உமக்கு சான்று பகர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. தலைவர்களின் தலைவராம் இறைவா,
   எங்கள் நாட்டு மக்களை வழிநடத்தும் தலைவர்கள், மக்களிடையே ஒற்றுமையையும் அன்பையும் வளர்க்கவும், பிரிவினைகளை அகற்றவும், மக்களின் நல்வாழ்வுக்கு தேவை யான திட்டங்களை செயல்படுத்தவும்
அவர்களுக்கு நல்ல மனதினை வழங்க வேண்டு மென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. உதவிசெய்ய அழைப்பவராம் இறைவா,
   ஏழ்மை, தனிமை, வன்முறை, நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அன்பை இழந்து வாடும் மக்களிடையே, உமது அன்பின் கருவிகளாக செயலாற்றும் வரத்தினை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அளிக்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நன்மைகளின் நாயகராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், பகிர்தல் வாழ் வால் கிறிஸ்துவின் தியாகத்துக்கு சான்று பகரவும்,
ஒற்றுமையிலும் அன்பிலும் நாளும் வளரவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, April 6, 2012

ஏப்ரல் 8, 2012

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 10:34,37-43
   அந்நாள்களில் பேதுரு பேசத் தொடங்கி, "திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந் தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவ ரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்'' என்றார்.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3:1-4
   சகோதர சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

நற்செய்தி வாசகம்: யோவான் 20:1-9
  வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழைய வில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்ல றைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, April 4, 2012

ஏப்ரல் 8, 2012

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

திருப்பலி முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்தை வீழத்தி, வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வானதூதர்கள் சான்று பகர்ந்தனர். வெறுமையாக இருந்த கல்லறையும் சாட்சியாக இருந்தது. உயிர்த்த இயேசுவை நேரில் கண்ட திருத்தூதர்களும் மற்ற சீடர்களும் அவருக்கு சான்று பகர்ந்து அவருக்காக தங்கள் உயிரையே கையளித்தனர். உலக முடிவு வரை எந்நாளும் நம்மோடு இருப்பதாக வாக்களித்திருக்கும் உயிருள்ள இறைமகன் இயேசுவுக்கு உண்மையுள்ள சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைமக்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி திருத்தூதர் பேதுரு மக்களுக்கு பறைசாற்றிய நிகழ்வு இடம் பெறுகிறது. உயிர்த்த இயேசுவோடு உண்டு, குடித்த பேதுரு, வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் இயேசுவே நடுவராக இருப்பார் எனச் சான்று பகர்கிறார். இறை இயேசுவில் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவரும் நமது பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைமக்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், கிறிஸ்து அளிக்கும் நிலை வாழ்வினைப் பற்றி எடுத்து கூறுகிறது. இறைத்தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் இறைமகன் இயேசுவின் மாட்சியில் பங்குபெறுமாறு, அவரோடு நாம் சிலுவையில் இறந்துவிட்டோம் என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்து தரும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளுமாறு நாம் புனிதத்தில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. உயிர் அளிப்பவராம் இறைவா,
   உம் திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு தோன்றி வளர்ந்த திருச்சபை உலக மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்டு, புனிதமான மக்களை உமக்காக உருவாக்க வரமருள வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

2. வெற்றி வேந்தராம் இறைவா,
   திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உம் திருமகனின் உயிர்ப்பை பறைசாற்றும் உன்னத தூதுவர்களாக செய லாற்ற உதவ வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

3. மாட்சியின் மன்னராம் இறைவா,
   உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப் பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவ ருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கத்தின் நிறைவாம் இறைவா,
   பாவம், நோய், ஏழ்மை, வன்முறை, மதவெறி, தீவிரவாதம் போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கும் அனைவரும்,
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனைப் போல, புது வாழ்வுக்கு உயிர்த்தெழ உதவிபுரிய வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிர்ப்பின் நாயகராம் இறைவா,
   உமது அன்பில் ஒரே குடும்பமாக ஒன்றித்து வாழும் எங்கள் பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகனது சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்து, கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ வரம் தர வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

Sunday, April 1, 2012

ஏப்ரல் 1, 2012

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

திருப்பவனிக்கு முன்: மாற்கு 11:1-10
   இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர் களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களைஅனுப்பி, "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டிவைக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், 'ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்' எனச் சொல்லுங்கள்'' என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டு வாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண் டிருக்கையில், அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? கழுதைக்குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?'' என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட் டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும் வேறு சிலர் வயல்வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்ற வர்கள், "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.
முதல் வாசகம்: எசாயா 50:4-7
   நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2:6-11
   கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 14:1-15:47
   பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள் கள் இருந்தன. தலைமை குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ் வாறு சூழ்ச்சியாய் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடி கொண்டி ருந்தனர்; ஆயினும், 'விழாவின்போது வேண்டாம்; ஒரு வேளை மக்களி டையே கலகம் ஏற்படக்கூடும்' என்று நினைத்தனர். இயேசு, பெத்தானியா வில் தொழுநோயாளர் சீமோன் இல் லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறு மணத் தைலம் கொண்ட படிகச் சிமிழு டன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, 'இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே,' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண் மீதும் சீறி எழுந்தனர். இயேசு அவர் களிடம், 'அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின் றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப் போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று கூறினார்.
   பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக் கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
   புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், 'நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: 'நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாள ரிடம், 'நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார்' எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறை யைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
   மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, 'என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, 'நானோ? நானோ?' என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், 'அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதி யுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்' என்றார்.
   அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, 'இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப் பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல் கிறேன்' என்றார். அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.
   இயேசு அவர்களிடம், 'நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், 'ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்' என்றார். பேதுரு அவரிடம், 'எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்' என்றார். இயேசு அவரிடம், 'இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்' என்றார். அவரோ, 'நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்' என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.
   பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், 'நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்' என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், 'எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்' என்று அவர்களிடம் கூறினார். சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்″ என்று கூறினார். அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், 'சீமோனே, உறங்கிக் கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்' என்றார். அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, 'இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்' என்று கூறினார்.
   இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப் பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்க விருந்தவன், 'நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, 'ரபி' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாள ரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, 'கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும்' என்றார். அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.
   அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலை மைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்க வில்லை. பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து, 'மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டு கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்' என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை. அப்பொ ழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, 'இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா?' என்று இயேசுவைக் கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலை மைக் குரு, 'போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?' என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, 'நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள்' என் றார். தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, 'இன்னும் நமக்குச் சான்று கள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?' என்று கேட்க, அவர்கள் அனைவரும், 'இவன் சாக வேண்டியவன்' என்று தீர்மானித்தார்கள். பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, 'இறைவாக்கினனே, யார் எனச் சொல்' என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.
   அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து, பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, 'நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே' என்றார். அவரோ, 'நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை' என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். அப்பொழுது சேவல் கூவிற்று. அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், 'இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான்' என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்த வர்களும், 'உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன்' என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, 'நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனி தனை எனக்குத் தெரியாது' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, 'சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.
   பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத் துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்க அவர், 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, 'நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!' என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான்.
   விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்க மாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து, 'யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?' என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந் திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, 'அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அவர்கள், 'அவனைச் சிலுவையில் அறையும்' என்று மீண்டும் கத்தினார்கள். அதற்குப் பிலாத்து, 'இவன் செய்த குற்றம் என்ன?' என்று கேட்க, அவர்கள், 'அவனைச் சிலுவையில் அறையும்' என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
   பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்து கொண்டு போய்ப் படைப் பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்கு செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி, 'யூதரின் அரசே வாழ்க!' என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர். அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடை களை அணிவித்து அவரைச் சிலுவை யில் அறைவதற்காக வெளியே கூட்டி சென்றனர்.
   அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசு வின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் 'மண்டை ஓட்டு இடம்' எனப்பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்; அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத் தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவரு டைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க 'யூதரின் அரசன்' என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக, இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, 'ஆகா, திருக் கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலை மைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, 'பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை' என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவர்கள், 'இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையி லிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்' என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
   நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, 'எலோயி, எலோயி, லெமா சபக்தானி?' என்று உரக்கக் கத்தினார். 'என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்பது அதற்குப் பொருள். சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, 'இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்' என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, 'பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்' என்றார். இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, 'இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்' என்றார். பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்தபோது அவர்கள் அவரைப் பின் பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள்.
   இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத் திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, 'அவன் இதற்குள் இறந்து விட்டானா?' என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிட மிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி