Thursday, February 19, 2015

பிப்ரவரி 22, 2015

தவக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   உடன்படிக்கையின் கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மனமாற்றத்தின் காலத்திற்குள் நுழைந்திருக்கும் நாம், இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக் கின்றோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் மீட்பைப் பற்றி சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் நாம் சோதனைகளை எதிர்கொண்டாக வேண்டும் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். நமது வாழ்க்கை சோதனைகளில் வெற்றிபெற இறைவனின் அருள் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், பேரழிவின் வெள்ளப்பெருக்கிற்கு பின்பு நோவாவுடனும் அவர் புதல்வருடனும் ஆண்டவராகிய கடவுள் செய்த உடன்படிக்கையைப் பற்றி பார்க் கிறோம். நோவாவின் வெள்ளப்பெருக்கு திருமுழுக்கு அருட்சாதனத்தின் முன்னடையாள மாக இருப்பதைக் காண்கிறோம். கடந்த காலத் துன்பங்களை மறந்து, இறைவன் தரும் புது வாழ்வை ஏற்கும் மனதுடன் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, இயேசு கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்புமே நமது மீட்புக்கு ஒரே வழி என்பதை எடுத்துரைக்கிறார். ஆண்டவர் தரும் மீட்பை நாம் திருமுழுக்கின் வழியாக பெற்றுக்கொள்கிறோம் என்றும் சுட்டிக்காட்டுகிறார். திருமுழுக்கில் கடவுளுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உடன்படிக்கையின் இறைவா,
   உமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டு, உமக்கு பிரமாணிக்கமாக வாழும் வரத்தை திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மீட்பளிக்கும் இறைவா,
   உமது திருமகன் வழியாக உலக மக்களோடு நீர் செய்துள்ள உடன்படிக்கையை புதுப்பித்து, உம்மை ஏற்காத மக்கள் எல்லோரும் உமது மீட்புத் திட்டத்தில் பங்குபெற துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அமைதியின் இறைவா,
   எம் நாட்டில் நிலவும் தீவிரவாதம், மதவாதம், சாதிப் பிரிவினைகள், வன்முறைகள் போன்றவை நீங்கி, மக்கள் அமைதியுடன் வாழும் நிலை உருவாக உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிக்கும் இறைவா,
   இவ்வுலக வாழ்க்கைப் போராட்டத்தில் பல்வேறு சோதனைகளால் துன்புறும் மக்கள் அனைவரும் உமது இரக்கத்தால் புதுவாழ்வைப் பெற்றுக்கொள்ள துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மனந்திருப்பும் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் மனமாற்றத்தின் பாதையில் இறையாட்சிக்கு உரியவர்களாக வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.