கிறிஸ்துவுக்கு முன்

   கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்று உலக வரலாறு இரண்டாக பிரிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அனைத்தும் வெறுமையாய் இருந்தன. கடவுள் பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களையும் தமது வார்த்தையால் படைத்து, தமது ஆவியால் அவற்றுக்கு இயக்கம் அளித்தார். படைப்பின் இறுதியில் கடவுள்,அவரை அறிந்து, அன்பு செய்து, அவரை அடைய மனிதரை உருவாக்கினார். மனித இனம் தோன்றிய வேளையில், இயற்கையின் விந்தைகளைக் கண்டு பயந்தான் மனிதன். இயற்கையின் விளையாட்டுகளுக்கு பின்னணியில் ஏதோ ஒரு ஆற்றல் செயல்புரிவதை உணர்ந்தான்.

கடவுளைப் பற்றிய எதிர்பார்ப்புகள்:
   இயற்கைக்கு மேற்பட்ட அந்த ஆற்றலை ஒரே கடவுளாகவோ, பல தெய்வங்களாகவோ மக்கள் வணங்கினர். பலியிடும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர். கலைகளும் இலக்கியங்களும் வளர்ந்த காலத்தில் தெய்வங்களுக்கு பல்வேறு உருவங்களும் கதைகளும் உருவாக்கப் பட்டன. இதன் விளைவாக கடவுளை பற்றிய பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடையே தோன்றின. கடவுள் மனிதராக இந்த உலகத்தில் பிறக்க வேண்டும், மக்கள் கடவுளிடமும் பிற மனிதர்களிடமும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை போதிக்க வேண்டும், மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாக தம்மையே பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மக்களிடையே வலுப் பெற்றன. எனவே கடவுள் தம்மை மனித உருவில் வெளிப்படுத்த விரும்பினார். அதற்காக ஒரு மக்கள் இனத்தை தயார் செய்ய விரும்பினார்.

ஆபிரகாமின் வழிமரபினர்:
   ஆபிரகாம் மற்றும் அவரோடு இருந்த மக்கள் ஒரே கடவுளை உருவமற்ற நிலையிலேயே வழிபட்டு வந்தனர். தம்மை ஒரே கடவுளாக உருவம் இல்லாமல் வழிபட்ட மக்கள் மீது கடவுள் அன்பு கொண்டார். அந்த மக்களுக்கு தமது வார்த்தைகளால் தம்மை வெளிப்படுத்தினார். அவர்களுக்கு ஆசிவழங்கி அந்த மக்கள் இனத்தை தமதுசொந்த மக்கள் என்ற நிலைக்கு உயர்த்தினார். கடவுள் ஆபிரகாமைஅழைத்து, அவரது வழிமரபின் வழியாகஉலகின் மக்கள் இனங்கள் அனைத்தும் ஆசி பெறும் என்று வாக்களித்தார். ஆபிரகாம் தனது அன்பு மகன் ஈசாக்கை கடவுளுக்காக பலியிடத் துணியும் அளவுக்கு கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். கடவுள் தமது உடன்படிக்கையை நினைவுகூரும் வகையில், ஆபிரகாமின் சந்ததியினர் அனைவரும் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். கடவுள் மனிதராக பிறக்க ஆபிரகாமின் வழிமரபை தேர்ந்தெடுத்தார்.

எகிப்தில் இஸ்ரயேல் மக்கள்:
   ஆபிரகாமின் வழிமரபினர் இஸ்ரயேல் மக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். ஆபிரகாமுக்கு ஈசாக்கும், ஈசாக்குக்கு யாக்கோபும் பிறந்தனர். யாக்கோபே இஸ்ரயேல் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார். யாக்கோபுக்கு யோசேப்பு உள்ளிட்ட 12 புதல்வர்கள் பிறந்தனர். இந்த பன்னிருவரின் பெயரால் பன்னிரண்டு குலங்கள் தோன்றின. யோசேப்பின் சகோதரர்கள் அவரை வணிகர்களிடம் விற்றனர். எகிப்தை அடைந்த யோசேப்பு தனது அறிவுத் திறனால், அந்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் யாக்கோபின் குடும்பத்தினர் எகிப்தில் அடைக்கலம் புகுந்தனர். யோசேப்பு அவர்களை மன்னனின் அனுமதியுடன் அங்கேயே தங்க வைத்தார். இஸ்ரயேல் மக்கள் சில நூற்றாண்டுகளாக எகிப்திலேயே வாழ்ந்து வந்தனர். இதனால் அவர்களின் மக்கள் தொகை அதிகமானது.

கானான் நாட்டில் இஸ்ரயேலர்:
   அதனைக் கண்டு அச்சமுற்ற புதிய பார்வோன் மன்னன், இஸ்ரயேல் மக்களை கொடுமைப்படுத்த தொடங்கினான். இஸ்ரயேலர் அடிமைத்தனத்தில் இருந்து தங்களை மீட்குமாறு கடவுளை நோக்கி மன்றாடி உதவி கேட்டனர். இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டில் இருந்து அழைத்து வர, மோசேயைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார். மோசேயின் குரலுக்கு பார்வோன் இணங்காததால், பல பெரும் துன்பங்களை எகிப்தியருக்கு அனுப்பினார். இறுதியாக, எகிப்தியரின் முதல் குழந்தைகளை கொன்று இஸ்ரயேல் மக்களை அடிமைத்தளையில் இருந்து விடுவித்தார். கடலின் நடுவே பாதை உருவாக்கி, இஸ்ரயேலர் எகிப்தியரின் படைகளிடம் இருந்து தப்பிச் செல்ல கடவுள் உதவினார். மோசே வழியாக பத்து கட்டளைகளை வழங்கி, இஸ்ரயேலரோடு கடவுள் உடன்படிக்கை ஒன்றையும் செய்து கொண்டார். இறுதியாக அவர்களை பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு கொண்டு சேர்த்தார். கானான் நாட்டிற்குள் நுழையும் முன்பே மோசே இறந்தார்.

நீதித் தலைவர்கள்:
   மோசேக்கு பின்னர், இஸ்ரயேல் மக்களை யோசுவா வழி நடத்தினார். அவருக்கு பிறகு இஸ்ரயேலரை வழி நடத்தியவர்கள் 'நீதித் தலைவர்கள்' என்றுஅழைக்கப் படுகின்றனர். இவர்கள் மக்களை நல்வழிப் படுத்துவதிலும் ஆபத்து நேரத்தில் பகைவர்களுக்கு எதிராக வீரர்களைத் திரட்டி போரிடுவதிலும் சிறந்து விளங்கினர். ஒத்னியேல், ஏகூது, சம்கார், தெபோரா, கிதியோன், தோலா, யாயிர், இப்தா, இப்சான், ஏலோன், அப்தோன், சிம்சோன் ஆகியோர் பன்னிரு நீதித் தலைவர்கள் ஆவர். இவர்களுக்குப் பின், சாமுவேல் என்பவர் இறுதி நீதித் தலைவராகவும் முதல் இறைவாக்கினராகவும் இருந்தவர். இவரே இஸ்ரயேல் மக்களுக்காக மன்னராட்சி முறையை உருவாக்கினார். சவுலையும் தாவீதையும் இஸ்ரயேலின் அரசர்களாக திருப்பொழிவு செய்தவர் சாமுவேல். சவுலும் தாவீதும் மக்களை திறம்பட ஆட்சி செய்தனர்.

இறைவாக்கினர் காலம்:
   தாவீதுக்கு பின் ஆட்சி செய்த சாலமோன் சிறப்பாக நாட்டை வழி நடத்தினார்.ஆண்டவரை வழிபட, சாலமோன் எருசலேமில் மிகப் பெரிய கோவில் ஒன்றைக் கட்டி எழுப்பினார். அவருக்கு பிறகு நாடு இரண்டாக பிளவுபட்டது. வடக்கு அரசு இஸ்ரேல் என்றும், தெற்கு அரசு யூதா என்றும் அழைக்கப்பட்டன. மன்னராட்சி நடைபெற்ற வேளையில், மன்னரும் மக்களும் அடிக்கடி கடவுளின் வழியில் இருந்து விலகி பாவங்கள் செய்து வந்தனர். அவர்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி, கடவுளுக்கு உகந்த மக்களாக வாழ அறிவுரை வழங்கியவர்கள் இறைவாக்கினர் என்று அழைக்கப்படுகின்றனர். எலியா, ஆமோஸ், எசாயா, எரேமியா, எசேக்கியேல், மீக்கா, தானியேல், ஓசேயா, யோவேல், ஒபதியா, யோனா, அபகூக்கு, செப்பனியா, ஆகாய், செக்கரியா, மலாக்கி போன்றோர் பல்வேறு காலங்களில் தோன்றியமுக்கியமான இறைவாக்கினர் ஆவர். இவர்கள் கடவுளின்ஆசியையும் சாபத்தையும் எடுத்துக்கூறி மக்களைநல்வழிப்படுத்தினர்.

இஸ்ரயேலரின் அடிமைத்தனம்:
   இந்த சூழ்நிலையில் கி.மு.732ம் ஆண்டு இஸ்ரேல் அசீரியாவிடமும், கி.மு.586ம் ஆண்டில் யூதா பாபிலோனியாவிடமும் வீழ்ந்தன. இக்காலத்தில் இஸ்ரயேல் மக்களிடையே வாழ்ந்த இறைவாக்கினர், மேசியாவைப் பற்றியும் கடவுளின் அரசைப் பற்றியும் நம்பிக்கையை உருவாக்கினர். கடவுள் மனிதராக பிறந்து மக்களை பாவங்களில் இருந்து மீட்பார் என்றும் முன்னறிவித்தனர். கி.மு.539ல் பாபிலோனைக் கைப்பற்றிய பாரசீக மன்னர் சைரஸ், இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை அளித்தார். தாய்நாடு திரும்பிய இஸ்ரயேலர், நாட்டை செப்பனிட்டனர். அழிக்கப்பட்ட எருசலேம் கோவிலை மீண்டும் கட்டி எழுப்பினர். அவர்களின் நாடு பாலஸ்தீன் எனப் பெயர் பெற்றது. கி.மு.333ல் பேரரசர் அலக்சாண்டர் அங்கு கிரேக்க அரசை நிறுவினார்.

மெசியாவை எதிர்ப்பார்த்தல்:
   கிரேக்கர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, கி.மு.166ல் யூதா மக்கபே இஸ்ரயேல் மக்களின் சொந்த அரசை மீண்டும் நிறுவினார். மக்கபேயரின் ஆட்சி கி.மு.63 வரை தொடர்ந்தது. பின்னர் ரோமையர் பாலஸ்தீனில் ஆட்சியைகைப்பற்றினர். யூதர்கள் தங்கள் சொந்தநாடிலேயே அடிமைகளாக வாழ்ந்துவந்தனர். இஸ்ரயேல் மக்கள் மீது அதிக அளவில் வரி விதித்து கொடுமைப்படுத்தினர். அவர்களின் கொடுமையைத் தாங்க முடியாத இஸ்ரயேலர், மெசியாவின் வருகைக்காக காத்திருந்தனர். அவர் அரசராக வருவார் என்றும், தங்களை அடிமைத் தளையிலிருந்து மீட்பார் என்றும் அவர்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் இந்த எதிர்ப்பார்ப்பு, கடவுள் உலகைப் பாவங்களில் இருந்து மீட்கும் மெசியாவாக தம்மை வெளிப்படுத்த ஏற்ற காலமாக அமைந்தது.