கிறிஸ்தவ விசுவாசம்

மூவொரு இறைவன்:
   இறைவன் தமது இறைத்தன்மையில் ஒருவ ராய் இருக்கிறார். இந்த ஒரே இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களாய் விளங்குகிறார். இறைவனின் இந்த இயல்பு அதி புனித திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தின் கண்ணுக்குப் புலப்படாத மற்றும் புலப்படும் அனைத்தையும் படைத்தவர் இவரே. இந்த ஒரே இறைவன் தம் எல்லையற்ற புனித இயல்பிலும், எல்லாம் வல்ல தன்மையிலும், எல்லையற்ற ஞானத்தி லும், பராமரிப்பிலும், சித்தத்திலும், அன்பிலும் ஒரே ஒருவராய் இருக்கிறார். மோசேக்கு தம் மையே வெளிப்படுத்தியது போல், இவர் இருக் கிறவராய் இருக்கிறார். திருத்தூதர் யோவான் நமக்கு போதிப்பது போன்று, இவர் அன்பாய் இருக்கிறார்.
   இந்த ஒரே இறைவன் எட்டாத ஒளியில் வாழ்பவர், எல்லாப் பெயர்களுக்கும் அனைத்து பொருட்களுக்கும், படைக்கப்பட்ட எல்லா அறி வுக்கும் அப்பாற்பட்டவர். எனினும் இவர் தம்மையே நமக்கு வெளிப்படுத்த விரும்பினார். தந்தை, மகன், தூய ஆவியார் என்று தம்மையே வெளிப்படுத்தும் இறைவன் ஒருவரே, இந்த இயல்பைப் பற்றிய சரியான நிறைவான அறிவை நமக்கு தர முடியும். புனிதம் மிகுந்த இறைவனின் உள் வாழ்வில் நிலவும் உறவே, அவரை நித்தியத்திற்கும் மூன்று ஆட்களாக அமைக்கின்றது. மனித முறையில் நாம் சிந்திக்கக்கூடிய எல்லாவற்றிற்கும் இது அப்பாற்பட்டது. இவ்வுலகில் விசுவாசத்தின் தெளிவற்ற நிலையிலும், இறப்புக்குப் பின் நித்திய ஒளியிலும், இவருடைய நித்திய உயிரில் பங்குபெற நாம் அழைக்கப்பட் டுள்ளோம்.
   மகனை நித்தியத்திற்கும் பிறப்பிக்கும் தந்தையாகிய இறைவனை விசுவசிக்கிறோம். நித்தியத்திற்கும் பிறப்பிக்கப்படும் இறைவனின் வார்த்தையான மகனாகிய இறைவனை விசுவசிக்கிறோம். தந்தையிடம் இருந்தும், மகனிடம் இருந்தம் அவர்களுடைய நித்திய அன்பாக புறப்படும், தூய ஆவியாராகிய இறைவனை விசுவசிக்கிறோம். இவ்வாறு உட னொத்து நித்தியமானவர்களும், உடனொத்து சமமானவர்களுமான மூன்று தெய்வீக ஆட்களில், முற்றும் ஒரே ஒருவரான கடவுளின் வாழ்வும் இன்பமும் நிரம்பிப் பொங்கு கின்றது. இவ்வாறே, படைக்கப்படாத பொருளுக்கு உரிய ஒப்பற்ற மாண்பும் மகத்துவமும் நிறைவு பெறுகின்றது.

இயேசு கிறிஸ்து:
   இயேசு கிறிஸ்து இறைமகனும் நம் ஆண் டவருமாக இருக்கிறார். காலங்கள் தொடங் கும் முன்பே, தந்தை இறைவனிடம் இருந்து பிறந்த நித்திய வாக்கு இவரே. இவர் தந்தை யோடு ஒரே பொருளானவர். இவர் வழியா கவே அனைத்தும் படைக்கப்பட்டன. இவர் தூய ஆவியாரின் வல்லமையால், கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். இவர் இறைத்தன்மையில் தந்தைக்கு சம மானவர், மனிதத்தன்மையில் தந்தைக்கு கீழ்ப்பட்டவர். இவர் அருளும் வாய்மையும் நிறைந்தவராய் நம்மிடையே விளங்கினார். இவர் இறையரசை அறிவித்து, அதை மக்க ளிடையே உருவாக்கினார். இவர் நம்மீது அன்பு செலுத்தியது போன்று, நாமும் ஒரு வர் மீது ஒருவர் அன்பு செலுத்துமாறு புதிய கட்டளையைத் தந்தார்.
   இயேசு கிறிஸ்து, மன எளிமை, சாந்தம், பொறுமையுடன் சகித்தல், நீதியின்பால் தாகம், இரக்கம், இதயத் தூய்மை, சமாதான விருப்பம், நீதியினிமித்தம் துன்பப்படுதல் ஆகிய வழிகளைக் கற்பித்தார். கடவுளின் செம்மறியான இவர், உலகின் பாவங்களை தம்மீது சுமந்து போன்சியுஸ் பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் தம் மையே பரிகார பலியாக ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டார். அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்து எழுந்தார். தமது உயிர்ப்பால் நம்மையும் உயிர்ப்பித்து, தமது அருள் வாழ்வில் நமக்கும் பங்கு தந்தார். நாற்பதாம் நாளில் விண்ணகத்திற்கு எழுந்தருளி, தந்தையாகிய இறைவனின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். உலகம் முடியும் காலத்தில், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.

தூய ஆவியார்:
   தூய ஆவியார், ஆண்டவரும் உயிர் அளிப் பவருமாக இருக்கிறார். தந்தையாம் இறை வனோடும், மகனாம் இறைவனோடும் இவர் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறு கின்றார். முற்காலங்களில் இறைவாக்கினர் வழியாக பேசியவர் இவரே. இயேசு கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் சென்ற பிறகு, தூய ஆவியாரை இந்த உலகுக்கு அனுப்பி வைத் தார். இவர் திருத்தூதர்களில் செயலாற்றி, திருச்சபை தோன்றி வளரச் செய்தார். திருச் சபைக்கு தொடர்ந்து ஒளியும் உயிரும் தந்து, இதைப் பாதுகாத்து வழிநடத்தி வருகிறார். இறைவனில் நிறைவு பெற்றவர்களாய் வாழு மாறு, இவரது செயல் திருச்சபையின் உறுப் பினர்களின் ஆன்மாவை ஊடுருவிச் செல் கிறது. தம் அருளைப் புறக்கணியாமல் வாழ் பவர்களை, தூய ஆவியார் தூய்மையில் வழி நடத்துகிறார். 

கத்தோலிக்க திருச்சபை:
   இயேசு கிறிஸ்து, பேதுரு என்னும் பாறை மீது தமது ஒரே திருச்சபையை நிறுவினார். இந்த திருச்சபை ஒருமை, புனிதம், கத்தோ லிக்கம் (பொதுமை), திருத்தூதுத்துவம் ஆகிய இயல்புகளை கொண்டுள்ளது. திருச்சபை கிறிஸ்துவின் மறை உடல். இது பலநிலை கொண்ட, அதிகார அமைப்பும் ஆன்மீக சமூக முமாய் இருக்கின்றது. இவ்வுலக திருச்சபை, பயண நிலையில் உள்ள இறை மக்களின் கூட்டமும், விண்ணக வரங்களால் நிரப்பப் பெற்ற சபையுமாய் இருக்கிறது. மீட்புப்பணி, திருச்சபையின் வழியாக மனித வரலாற்றில் தொடர்ந்து நிலைபெறுகிறது. திருச்சபை தன் உறுப்பினர்களை கிறிஸ்து இயேசுவின் மர ணம், உயிர்ப்பு ஆகிய மறைபொருட்களிலும், தனக்கு உயிரளித்து நடத்தி வரும் தூய ஆவி யாரின் அருளிலும் பங்குபெறச் செய்கிறது.
   திருச்சபை இஸ்ரயேல் வழியாக இறைவ னின் வாக்குறுதிகளுக்கு வாரிசாகவும், ஆபிர காமின் ஞான மகளாகவும் விளங்குகிறது. இஸ்ரயேலரின் புனித நூல்களை திருச்சபை அன்புடன் பாதுகாத்து, அதன் முதுபெரும் தந்தையரையும் இறைவாக்கினரையும் போற்றி வணங்குகிறது. திருச்சபை திருத்தூதர்களின் வாழ்வளிக்கும் வார்த்தைகளை பாதுகாத்து வழிவழியாகக் கையளித்து வருவதோடு, அவர்களின் ஆயர்களுக்கு உரிய அதிகாரங்களை பேதுருவின் வாரிசான திருத்தந்தையிடமும், அவரோடு ஒருமைப்பாடு கொண்ட ஆயர் களிடமும் ஒப்படைத்து வருகின்றது. கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக தெளிவற்ற வகையில் வெளிப்படுத்தி, பிறகு கிறிஸ்து இயேசு வழியாக முற்றும் தெளிவுற அறிவித்த உண்மையைப் பாதுகாத்து, போதித்து, விளக்கிப் பரப்புவது திருச்சபையின் பொறுப்பாகும். இந்த பணியில் தூய ஆவியார், திருச்சபைக்கு தொடர்ந்து துணை புரிகிறார்.
   கத்தோலிக்க திருச்சபை, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அகில உலக திருச்சபை மீதும், திருத்தந்தைக்கு அதிகாரம் உள்ளது. திருச்சபை அருள் அடையாளங்கள் வழியாக, தனது உறுப்பினர்களை வாழ்வின் அனைத்து நிலைகளிலும் புனிதத்தில் வழி நடத்துகிறது. எழுத்து உருவமாக அமைந்த, அல்லது மரபு வழியாக கையளிக்கப்பட்ட இறைவனின் வார்த்தையில் அடங்கியுள்ள அனைத்தையும் திருச்சபை ஏற்றுக் கொள்கி றது. மேலும், இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட மறை உண்மைகளை, காலச் சூழ்நிலை களுக்கு ஏற்ப திருச்சபை விளக்கிக் கூறுகிறது. பேதுருவின் வாரிசு என்ற முறையிலும், இறை மக்கள் அனைவரின் ஆசிரியர் என்ற வகையிலும், அதிகாரப்பூர்வமாக போதிக்கும் வேளையில், திருத்தந்தை தவறா வரம் உடையவராக விளங்குகிறார். அவரோடு ஒன் றித்து செயல்படும் ஆயர்களுக்கும் இந்த வரம் உண்டு. திருப்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் ஆயர்களின் பணியில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். 

திருவழிபாடு:
   திருச்சபை  அனைத்திற்கும் மேலாக இறைவனை நேசித்து, அவருக்கு ஆரா தனை செலுத்தி வருகிறது. நமது பாவ மன்னிப்புக்காக, கிறிஸ்து இயேசு கல் வாரி மலையில் செலுத்திய பலியை நாள்தோறும் புதுபித்து இறைவனுக்கு நன்றி கூறுகிறது. எல்லாம் வல்ல இறைவனின் அதிமிக மகிமைக்காக வும், மக்களின் பாவங்களுக்கு பரிகார மாகவும் இப்பலியைப் புதுப்பித்து ஆரா தனை செலுத்துகிறது.
   திருச்சபை கிறிஸ்து வின் வாழ்வை மையமாக கொண்டு, திருவழிபாட்டு ஆண்டையும் ஒழுங்கு முறைகளை யும் அமைத்துள்ளது. இயேசு கிறிஸ்து வின் வருகைக்கு தயார் செய்ய திரு வருகை காலத்தையும், அவரது பிறப் பைக் கொண்டாட கிறிஸ்து பிறப்பு விழாக் காலத்தையும், கிறிஸ்துவின் பணி வாழ்வை சிந்திக்க பொதுக் காலத்தையும், இயேசுவின் திருப்பாடுகளை எண்ணி தவ முயற்சிகளை மேற்கொள்ள தவக் காலத்தையும், அவரது உயிர்ப்பைக் கொண்டாட பாஸ்கா காலத்தையும் திருச்சபை அமைத்துத் தந்துள்ளது. திருப்பலி, நற்கருணை வழி பாடு ஆகியவை கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைந்துள்ளது. செபமாலை, சிலுவைப் பாதை ஆகிய பக்தி முயற்சிகள் இறைவனின் உறவில் வளர உதவுகின்றன.

அருள் அடையாளங்கள்:
திருமுழுக்கு:
   பிறப்பு வழிப் பாவத்தையும் செயல் வழிப் பாவத்தையும் போக்கி, நம்மை கடவுளுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகள் ஆக்குகிறது. 
உறுதிபூசுதல்:
  திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களை, உண்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்த தூய ஆவியாரையும் அவரது வரங்களையும் வழங்குகிறது. 
நற்கருணை: 
   கோதுமை அப்பம் மற்றும் திராட்சை இரசம் ஆகியவற்றின் குணங்களில் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் நமது ஆன்ம உணவாகிறது. 
ஒப்புரவு: 
    திருமுழுக்கு பெற்ற பிறகு செய்யும் பாவங்களைப் போக்க உதவுகிறது. 
நோயில்பூசுதல்:
   கடின நோயால் வேதனை அடைபவர்கள், பாவ மன்னிப்பு வழியாக ஆன்ம, உடல் சுகங்களை பெற உதவுகிறது.
குருத்துவம்:
   திருப்பலி ஒப்புக்கொடுக்கவும், அருள் அடையாளங்களை நிறைவேற்றவும் திருப்பணி அதிகாரங்களை வழங்குகிறது. 
திருமணம்:
   இல்லற வாழ்வைத் தொடங்குபவர்களுக்கு, இறைவனின் ஆசீரையும் அருளை யும் வழங்குகிறது.

புனிதர்களின் உறவு:
   கத்தோலிக்க திருச்சபை, மூன்று வித மான புனிதர்களை அடையாளம் காட்டு கிறது. விண்ணகத்தில் வாழும் புனிதர் கள், உத்தரிப்பிடத்தில் தூய்மை பெறும் ஆன்மாக்கள் மற்றும் மண்ணுலகில் வாழ்பவர்கள். இவர்களிடையே நிலவும் உறவே, புனிதர்களின் சமூக உறவு என்று அழைக்கப்படுகிறது. உலகில் வாழ்கிற வர்கள், புனிதர்கள் மற்றும் உத்தரிக்கும் ஆன்மாக்களின் உதவியைப் பெறுகின்ற னர். உத்தரிக்கும் ஆன்மாக்கள், புனிதர் கள் மற்றும் மண்ணுலகில் வாழ்வோரின் உதவியைப் பெறுகின்றனர். விண்ணக புனிதர்கள், மண்ணுலகில் வாழ்வோருக் கும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கும் உதவி செய்கின்றனர். எனவே புனிதர்க ளிடம் வேண்டுதல் செய்வதும், அவர்க ளுக்கு வணக்கம் செலுத்துவதும் இறை வனின் உதவியைப் பெற தகுந்த வழிகள் ஆகும். கத்தோலிக்க திருச்சபை, இறைவனின் தாயான கன்னி மரியாவுக்கு மேலான வணக்கமும், மற்ற புனிதர்களுக்கு வணக்கமும் செலுத்துகிறது.

பாவ மன்னிப்பு:
   கடவுளின் கட்டளைகளுக்கு எதிராகவும், மனிதர்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையி லும் செய்யப்படும் செயல்களே பாவம் ஆகும். பாவம் இரண்டு வகைப்படும். அவை,
   பிறப்பு வழிப் பாவம்: நமது ஆதிப் பெற்றோ ரிடம் உருவாகி, மனிதர் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து வரும் (கடவுளின் விருப்பத்துக்கு எதிராக செயல்படத் தூண்டும்) பாவ இயல்பே பிறப்பு வழிப் பாவம் எனப்படுகிறது.
   செயல் வழிப் பாவம்: நாம் வாழும் காலத் தில், நமது சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களால் செய்யப்படுவது செயல் வழிப் பாவம் என்று அழைக்கப்படுகிறது.
   பிறப்பு வழிப் பாவம் திருமுழுக்கின் வழி யாக போக்கப்படுகிறது. எவ்வாறெனில் திரு முழுக்கின் வழியாக நாம் திருச்சபையின் உறுப்பினர்கள் ஆவதால் கடவுளின் விருப் பத்தை நிறைவேற்றும் அருளைப் பெறுகி றோம். செயல் வழிப் பாவம் ஒப்புரவு அருள் அடையாளம் வழியாக போக்கப்படுகிறது. நாம் செய்த பாவங்களுக்காக முழுமையாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் மட்டுமே, கடவுளின் மன்னிப்பை முழுமையாக பெற முடியும். இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்கு பரிகாரமாக, சிலுவையில் அனுபவித்த பாடுகளின் பேறுபலன்கள் வழியாக நாம் இதில் மன்னிப்பு பெறுகிறோம்.

நிலை வாழ்வு:
    நிலையற்ற இவ்வுலக வாழ்வு முடிந்த பிறகு, நாம் நிலையான மறுவுலக வாழ்வுக்குள் நுழைகிறோம். அதில் நமக்கு கிடைக்க வேண்டிய இன்பமும் துன் பமும் நமது இவ்வுலக வாழ்வின் அடிப்படையில் இறைவன் வழங்கும் தீர்ப்புகள் மூலம் முடிவு செய் யப்படுகிறது.
   தனித் தீர்ப்பு: மரணத்துக்கு பிறகு தனித் தீர்ப்பு நடக்கிறது. நாம் இவ்வுலகில் செய்த பாவம், புண் ணியம், பரிகாரம் போன்ற செயல்களுக்கு ஏற்ப நர கம், மோட்சம், உத்தரிப்பிடம் போன்றவற்றில் ஏதே னும் ஒரு இடத்துக்கு செல்லுமாறு இயேசு நமது ஆன்மாவுக்கு தீர்ப்பு வழங்குவார்.
   பொதுத் தீர்ப்பு: உலகம் முடியும் காலத்தில் வாழ் வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க இயேசு கிறிஸ்து அரசராக வருவார். இறந்தோர் அனைவ ரும் உடலோடு உயிர்த்து எழுவர். நல்லோரின் பேறு பலன்களுக்கு பரிசாக அவர்களுக்கு முடிவில்லாப் பேரின்ப வாழ்வுக்கும், தீயோரின் தீச்செயல்களுக்கு விலையாக முடிவில்லாத தண்டனைக்கும் கைய ளிப்பார். உடலோடும் ஆன்மாவோடும் நல்லோர் மோட்சத்திற்கும், தீயோர் நரகத்திற்கும் செல்வர். அதன்பின் இறைவனின் ஆட்சியில் புதிய வானகமும், வையகமும் தோன்றும்.

கிறிஸ்தவ வாழ்வு:
   "என்னைப் பின்பற்ற விரும்புபவன், தன் சிலுவை யைத் தன் தோள் மேல் சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றட்டும்", என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. கிறிஸ்து சாவில் இருந்து உயிர்ப்பு வாழ்வுக்கு கடந்து சென்றது போல, பாவ வாழ்வில் இருந்து புனித வாழ்வுக்கு கடந்து செல்வதே ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் விடுக்கப் படும் அழைப்பு ஆகும்.
   "ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தம்மையே வெறு மையாக்கி அடிமையின் வடிவை ஏற்று, சாவையே ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற் கும் அளவுக்கு தம்மையேத் தாழ்த்திக் கொண்டார்." இறைவன் நமக்காக மனிதரானார், நமது பாவங்க ளுக்காக கொலையுண்டார் என்பதை நினைத்து, அவ ரது அன்புக்கு நன்றி செலுத்துவதும், அவருக்கு ஏற்ற வகையில் புனிதமான வாழ்வு வாழ்வதும் கிறிஸ்த வர்களின் கடமையாகும். கிறிஸ்து இயேசுவும் தமது திருச்சபை வழியாகவும், அற்புதங்கள் வழியாகவும் நம்மை ஆசிர்வத்து வழிநடத்துவார்.