Friday, December 15, 2017

டிசம்பர் 17, 2017

திருவருகை காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   திருவருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய நாளை நம் தாய் திருச்சபை மகிழ்ச்சி ஞாயிறாக சிறப்பிக்கிறது. ஒளியாம் இறைவனின் வருகைக்காக இஸ்ரயேல் மக்களைத் தயார் செய்த திருமுழுக்கு யோவானின் குரலுக்கு செவிகொடுக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் முன்னோடியாக வந்த யோவானின் தாழ்ச்சி நிறைந்த மனநிலையுடன் வாழ பழகிக் கொள்வோம். ஆண்டவரின் வருகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொணர, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா வழங்கிய மகிழ்ச்சியின் செய்தியை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. உள்ளத்திற்கு மகிழ்ச்சி, விடுதலை வாழ்வு, அருள்தரும் ஆண்டு என்ற நற்செய்தியை எசாயா அறிவிக்கிறார். ஆண்டவரின் நற்செய்தி, நமக்கு உண்மையான பூரிப்பை வழங்குகிறது என்பதை அவர் நினைவூட்டுகிறார். ஆண்டவரில் எப்பொழுதும் புதுவாழ்வு வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், எல்லா சூழ்நிலையிலும் நாம் மகிழ்ந்திருக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார். தூய ஆவியாரின் செயல்பாட்டை நம்மில் அனுமதித்து, நல்லதை பற்றிக்கொள்ள அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நம் உடலையும் உள்ளத்தையும் ஆன்மாவையும் தூயதாக பாதுகாத்து, ஆண்டவரில் மகிழ்ந்திருக்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மகிழ்ச்சியின் மன்னரே இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு பணி செய்வதில் மகிழ்ந்திருக்கவும், உமது நற்செய்தியின் மகிழ்ச்சியை உலகோருக்கு பகிரவும் வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அக்களிப்பு தருபவரே இறைவா,
   பகை, வன்முறை,
தீவிரவாதம், போர் போன்றவற்றால் அமைதியின்றி தவிக்கும் இவ்வுலக மக்களை, உமது அன்பால் ஒன்றிணைத்து, அக்களிப்பின் தைலத்தால் திருநிலைப்படுத்துமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. மகிமையின் வேந்தரே இறைவா,
  
எம் நாட்டு மக்களிடையே பிரிவுகளையும் பிணக்குகளையும் தூண்டி, அமைதியை சீர்குலைப்போரை மனந்திருப்பி, உமது மேன்மையை இந்தியர்கள் அனைவரும் உணரச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. மனமாற்றம் அளிப்பவரே இறைவா,
   தீமைக்குரிய இருளின் பாதையில் நடக்கும் அனைவரும், ஒளியாகிய உம்மை கண்டுகொள்ளவும், அதன் வழியாக உடல், உள்ள, ஆன்ம நலன்களை பெற்று மகிழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அகமகிழ்வின் ஊற்றே இறைவா,
   உம் திருமகனின் வருகைக்காக காத்திருக்கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மீதும் உமது அருளை பொழிந்து, மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.