Thursday, November 30, 2017

டிசம்பர் 3, 2017

திருவருகை காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பேறுபெற்றவர்களே,
   திருவழிபாட்டு நாள்காட்டியின் புத்தாண்டு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம். திருவருகை காலத்தின் முதல் ஞாயிறாகிய இன்று, ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். வெளியூர் பயணம் சென்றிருக்கும் வீட்டுத் தலைவரின் வருகைக்காக காத்திருக்கும் பணியாளரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவை எதிர்கொள்ள விழிப்புடன் இருக்குமாறு இன்றையத் திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. ஆண்டவரின் வருகையின்போது பாராட்டு பெறும் வகையில் விழிப்புடன் வாழ வரம் கேட்டு, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
பேறுபெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் வருகையை எதிர்நோக்கும் இஸ்ரயேல் மக்களின் ஏக்கத்தை எடுத்துரைக்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு எருசலேமுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள், புதுவாழ்வு தரும் ஆண்டவரின் வருகைக்காக கூக்குரலிடுவதைக் காண்கிறோம். மலைகளையும் உருகச் செய்கின்ற மாட்சிமிகு ஆண்டவரின் வருகைக்காக நம்மைத் தயார் செய்ய வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பேறுபெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், ஆண்டவரின் நட்புறவில் பங்குபெற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். கிறிஸ்து இயேசுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிற ஒவ்வொருவரும், இறையருளில் நிலைத்திருக்க வேண்டுமென்று அவர் அறிவுறுத்துகிறார். ஆண்டவர் தோன்றும் நாளில், குறைச் சொல்லுக்கு ஆளாகாதவர்களாய் அவர் முன் நிற்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி மடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விழித்திருக்க அழைப்பவரே இறைவா, 
   உமது திருமகனின் வருகைக்காக உலக மக்களைத் தயார் செய்யும் ஆர்வத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வல்லமை தருபவரே இறைவா,
   போர்களாலும், வன்முறைகளாலும் நிறைந்திருக்கும் இந்த உலகை, உமது வருகைக்கு ஏற்ற இடமாக மாற்றுகின்ற வரத்தை, உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒன்று சேர்ப்பவரே இறைவா,
  
எம் நாட்டு மக்கள் தவறான சமய நம்பிக்கைகளில் இருந்து விலகவும், உண்மை இறைவனாகிய உம்மை அறிந்து உம்மைத் தேடி வரவும் அருள் புரிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் காட்டுபவரே இறைவா,
   தீயோனின் வழியில் பயணிக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இருளின் செயல்களைக் களைந்துவிட்டு, உமது அருளின் ஆட்சிக்குரிய இயல்பை பெற்றுக்கொள்ள உதவிவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அனைத்துலக அரசரே இறைவா,
   இயேசுவின் வருகைக்காக விழிப்புடன் காத்திருப்பவர்களாய் வாழும் வரத்தை, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் வழங்கி பாதுகாத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Thursday, November 23, 2017

நவம்பர் 26, 2017

கிறிஸ்து அரசர் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாட்டத்துக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். ஆட்சி செய்வதற்கு தகுதியுள்ள ஒரே ஒருவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத்தன்மை குறித்து சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உலகின் முடிவில் நல்லோரையும் தீயோரையும் நம் ஆண்டவர் இயேசு பிரித்து தீர்ப்பு வழங்கும் வேளையில் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய நாம் இன்று அழைக்கப்படுகிறோம். அனைத்துலகின் அரசரான நம் ஆண்டவர் இயேசுவின் இரக்கத்தைப் பயன்படுத்தி, அவரது வலப்பக்கத்தில் நிற்கத் தகுதி பெறுவதற்கு ஏற்ப வாழ வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை ஓர் ஆயராக ஆட்சி செலுத்துவது குறித்த வாக்குறுதியை எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக நம் ஆண்டவர் வழங்குகிறார். இஸ்ரயேலின் ஆயராகிய கடவுள், தம் மந்தையாகிய இஸ்ரயேல் மக்களை நீதியுடன் வழிநடத்துவார் என்ற நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. ஆண்டவரின் நீதியுள்ள அரசாட்சியில் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உகந்த விதத்தில் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து இயேசுவின் மேன்மை நிறைந்த அரசாட்சியைக் குறித்து எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவின் அரசில் சாவு முற்றிலும் இல்லாதவாறு ஒழிக்கப்படும் என்பதையும் அவர் நமக்கு நினைவூட்டுகிறார். அனைத்திலும் அனைத்துமாய் இருக்கின்ற கடவுளின் அரசில் பங்குபெறும் தகுதியுடன் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. திருச்சபையின் ஆயரே இறைவா, 
   உமது நிலையான அரசை உலகெங்கும் நிறுவும் ஆர்வத்துடன், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தி பணியாற்றிட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அரசர்களின் அரசரே இறைவா,
   உமது அரசின் பரவலுக்கு எதிராக செயல்படும் நாடுகளின்
தலைவர்கள் அனைவரும் பதவி இழக்கவும், உலகெங்கும் உமது அரசு கட்டியெழுப்பப்படவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னரே இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மையின் நற்செய்தியை விரும்பித் தேடவும், உம் திருமகனின் மேலான ஆட்சியை மனமுவந்து ஏற்கவும் துணை புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சியின் தலைவரே இறைவா,
  
வாழ்வின் குறிக்கோளை அறியாமல் இவ்வுலகின் செயற்கைச் சூழலில் சிக்கி, தவறான இலக்கை நோக்கி பயணம் செய்து கொண்டிருப்போர் மனந்திரும்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வெற்றி வேந்தரே இறைவா,
   உம் திருமகன் எங்களைத் தீர்ப்பிட வரும்போது, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அவரது வலப்பக்கத்தில் நிற்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Thursday, November 16, 2017

நவம்பர் 19, 2017

பொதுக்காலம் 33-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
  
பொதுக்காலத்தின் முப்பத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுள் நமக்கு வழங்கிய ஒவ்வொரு பணியையும் எப்படி நிறைவேற்றினோம் என்பதற்கு நாம் கணக்கு கொடுக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு நினைவூட்டுகிறார். ஆண்டவரின் திட்டத்திற்கு ஏற்ப நம் வாழ்க்கை அமைந்துள்ளதா என்பதை சீர்தூக்கி பார்க்க நம்மை அழைக்கிறார். ஆண்டவரிடம் பரிசு பெறும் வகையில் விழிப்புடன் செயல்பட வரம் கேட்டு, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கணவரின் நம்பிக்கையை வீண்போக விடாத திறமையுள்ள மனைவியைக் குறித்து எடுத்துரைக்கிறது. இதன் வழியாக, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரிய மணவாட்டிகளாக செயல்பட நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் உண்மை உள்ளவர்களாய் வாழ்ந்து, அதற்கான நற்பயனை அடையும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவரின் வருகைக்காக நாம் விழிப்போடு இருக்குமாறு அறிவுரை வழங்குகிறார். அனைத்தும் அமைதியாக இருப்பதாக எண்ணும் வேளையில், திருடனைப் போன்று ஆண்டவரின் வருகை நிகழும் என்று எச்சரிக்கிறார். இருளின் வழிகளில் இருந்து விலகி, ஒளியின் மக்களாக எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விண்ணகத் தந்தையே இறைவா,
   திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்களிடம் ஒப்படைக்கப் பெற்ற பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி, இவ்வுலகில் இறையாட்சியை நிறுவ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. மகிமையின் மன்னரே இறைவா,
   உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்து, பொருளாதார தேவைகளை நிறைவு செய் பவர்களாய் வாழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. மேன்மை நிறைந்தவரே இறைவா,
   சாதி, மதம், இனம், மொழி என்ற பாகுபாடுகளால் பிளவுபட்டுள்ள எம் நாட்டு மக்கள் அனைவரும், நீர் ஒருவரே உண்மை கடவுள் என்பதை உணர்ந்து, உமது விருப்பத்தை நிறைவேற்ற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நலம் அருள்பவரே இறைவா,
   சோம்பல், ஆர்வமின்மை போன்ற காரணங்களால் நீர் வழங்கிய திறமைகளை சரியாக பயன்படுத்தாமல் வாழும் அனைவரும், மனந்திரும்பி பொறுப்புடன் செயல்பட  உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் நம்பிக்கையே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, உம் திருமகனிடம் இருந்து பரிசு பெறும் வகையில் விழிப்புடன் செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Thursday, November 9, 2017

நவம்பர் 12, 2017

பொதுக்காலம் 32-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஞானமுடையோரே,
  
பொதுக்காலத்தின் முப்பத்திரண்டாம் ஞாயிறு கொண்டாட்டத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஆண்டவரின் வருகைக்காக தயார் நிலையில் இருக்குமாறு இன்றைய திருவழிபாடு நம்மைப் பணிக்கிறது. உலக முடிவு எப்போது நிகழும் என்று நமக்கு தெரியாது என்றாலும், கடவுளுக்கு கணக்கு கொடுக்க நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்காக விழிப்போடு காத்திருக்க வேண்டும் என இயேசு நமக்கு இன்று கற்று தருகிறார். இறையாட்சி விருந்தில் பங்கேற்கத் தகுதி பெற விழிப்புடன் செயல்பட வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஞானமுடையோரே,
   இன்றைய முதல் வாசகம், ஞானத்தின் ஒளியை நாடிச் செல்லுமாறு நமக்கு அழைப்பு விடுப்பதைக் காண்கிறோம். ஞானத்தை நாடுவோர் அதை விழிப்புடன் தேட வேண்டுமென அறிவுரை வழங்குகிறது. ஞானம் நம்மை கவலையில் இருந்து விடுவிக்கிறது என்பதை உணர்ந்து வாழ்வோம். கடவுளின் அருளைப் பெற ஞானத்தோடு செயல்படும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஞானமுடையோரே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், ஆண்டவரின் வருகை குறித்த தெளிவை திருத்தூதர் பவுல் நமக்கு வழங்குகிறார். நாம் உயிரோடு இருக்கும்போதே ஆண்டவரின் வருகை நிகழலாம் என்ற உண்மையை உணர அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். எக்காளம் முழங்க ஆண்டவரின் வருகை நிகழும்போது, அவரை எதிர்கொள்ளத் தயாராய் இருக்க வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வானக அரசரே இறைவா,
   திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறையாட்சி நெறியில் மக்களை வழிநடத்தவும், உம் திருமகனின் வருகைக்கு தயார் செய்யவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகிழ்ச்சி தருபவரே இறைவா,
   உலக மக்கள் அனைவரும் நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்து மனந்திரும்பவும், உம் திருமகனின் வருகைக்காக தங்களைத் தயாரிக்கவும் அருள் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் உறைவிடமே இறைவா,
   எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் உமது மாண்பை உணர்ந்து கொள்ளவும், உமது நீதித் தீர்ப்புக்கு பயந்து நேர்மையாக ஆட்சி செய்யவும் தூண்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. குணம் அளிப்பவரே இறைவா,
   உலக நாட்டங்களாலும், உடல் இச்சைகளாலும் பாவத்தில் உழலும் மக்கள் அனைவரும், உமது இரக்கத்தால் மனந்திரும்பி, ஞானத்தோடு உம்மை எதிர்கொள்ள அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் மீட்பரே இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உம் திருமகனின் இறையாட்சி விருந்துக்கு விழிப்புடன் எங்களைத் தயாரிக்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Wednesday, November 1, 2017

நவம்பர் 5, 2017

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இயேசுவின் பணியாளர்களே,
  
பொதுக்காலத்தின் முப்பத்தோராம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் நாம் பணிவுடன் வாழ அழைப்பு விடுக்கிறது. 'கடவுள் மட்டுமே நம் தலைவர்; நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்' என்ற உண்மையை உணர்ந்து வாழ ஆண்டவர் இயேசு நமக்கு இன்று கற்று தருகிறார். வெளிவேடங்களைத் தவிர்த்து கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ்ந்தால் மட்டுமே விண்ணக வாழ்வைப் பெற முடியும் என்பவை அவர் நினைவூட்டுகிறார். உண்மைக்கும் நீதிக்கும் மதிப்பளித்து பணிவுடன் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம். 

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப் பெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், கடவுளுக்கு உண்மையாக நடக்காத குருக்களை ஆண்டவர் கண்டிப்பதைக் காண்கிறோம். தவறு செய்த சமயத் தலைவர்களின் ஆசிகளை சாபமாக மாற்றி விட்டதாக இறைவாக்கினர் மலாக்கி வழியாக ஆண்டவர் கூறுகிறார். கடவுளை நோக்கி மக்களை வழிநடத்த தவறிய சமையத் தலைவர்களின் நிலை தாழ்த்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுக்கிறார். நமது குருக்களுக்கு கடவுளின் அருள் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப் பெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் தமது தலைமைப் பண்பு குறித்து தெசலோனிக்க மக்களுக்கு விளக்கம் அளிக்கிறார். இறையாட்சி பணி செய்யும் ஒவ்வொருவரும், அவரைப் பின்பற்றி கனிவுடன் வாழ அழைக்கப்படுகிறோம். இறைவார்த்தையைக் கேட்கும் நாம் அனைவரும், கடவுளுக்கு விருப்பமான செயல்களை செய்கிறவர்களாய் வாழும் அருள் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விண்ணகத் தந்தையே இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த வழியில் இறைமக்களை வழிநடத்தி, உமது ஆசிகளை நிறைவாக வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாற்றம் தருபவரே இறைவா,
   உலகெங்கும் நிகழும் வன்முறைகளும் அடக்குமுறைகளும் முடிவுக்கு வரவும், மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர்வில் வளர்ச்சி காணவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் நாயகரே இறைவா,
   உண்மையும் நேர்மையுமற்ற அரசியல் தலைவர்களால் எங்கள் நாட்டு மக்கள் சந்தித்து வரும் அனைத்து நெருக்கடிகளும் பிரச்சனைகளும், விரைவில் முடிவுக்கு வர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நலம் நல்குபவரே இறைவா,
   பகட்டாலும் வெளிவேடத்தாலும் மன நிம்மதியை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், நீர் விரும்பும் வகையில் பணிவுடன் வாழ்ந்து நலம் அடைய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் தலைவரே இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் ஒருவருக்கொருவர் பணி செய்கிறவர்களாக வாழவும், உமது வழியில் நிலைத்திருக்கவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.