Wednesday, February 8, 2012

பிப்ரவரி 12, 2012

பொதுக்காலம் 6-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க அழைப்பு விடுக்கிறது. 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்ற தாழ்ச்சி யுள்ள வேண்டுதலை ஆண்டவர் முன் சமர்ப்பிக்க இன்று
நாம் கற்றுக்கொள்வோம். அப்பொழுது இறைவன் நம்மீது கருணை கூர்ந்து, நமக்கு நிறைவான நலன்களைக் கட்டளையிடுவார். நமக்கு வரும் துன்பங்கள், நோய்கள், இடையூறுகளில் கடவுளின் அருட்கரம் நம்மை வழிநடத்த வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், தொழுநோயாளர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் வழங்குவதை நாம் காண்கி றோம். மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாக தொழுநோய் இருந்ததால், தொழுநோயாளர்கள் சமூகத்தில் இருந்து விலகி இருக்குமாறு ஆண்டவர் அறிவுறுத் துகிறார். நமது தீட்டான தீய குணங்களை மற்றவர்களும் கற்றுக்கொள்ளாத வகையில், நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், இந்த வாசகத் திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், நமது செயல்கள் அனைத்தும் கடவுளின் மாட்சிக் காகவே செய்யப்பட வேண்டும் என்று திருத்தூதர் பவுல் அறிவுரை வழங்குகிறார். எப்பொழுதும் நான், எனது என்றே இறைவனிடம் கேட்டு பழகிவிட்ட நாம், அவருக்காக என்ன செய்தோம் என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நாம் கடவுளுக்கு விருப்ப மானவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், இந்த வாசகத் திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மன்னிப்பு அளிப்பவராம் இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த வழியில் வாழ்ந்து, இறைமக்கள் அனைவரையும் பாவம் என்ற தொற்றுநோயிலிருந்து விடுவித்து வழிநடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மனமாற்றம் அளிப்பவராம் இறைவா,
   உலகெங்கும் தொற்றுநோயாக பரவி இருக்கும் தீவிரவாதம், மதவாதம், வன்முறை, லஞ்சம், ஊழல், அடக்குமுறை போன்றவை, உமது அருளால் அழிந்து ஒழிய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நலன்கள் அளிப்பவராம் இறைவா,
   எங்கள் நாட்டை வழிநடத்தும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், தீய வழிகளில் புகழ் அடைவதையும், அடக்குமுறைகளால் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டுவதையும் விரும்பாமல், மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாய் வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நல்வாழ்வு அளிப்பவராம் இறைவா,
   நோய்கள், மன வேதனைகள், கடன் தொல்லைகள், வேலையின்மை, குழந்தை யின்மை, உணவின்மை, தனிமை, முதுமை போன்ற பல்வேறு துன்பங்களால் வருந்தும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு முழுமையாக நலம் அளித்து உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிழ்ச்சி அளிப்பவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமக்கு உகந்தவர்களாக வாழவும், துன்ப வேளைகளில் உமது உதவியைப் பெற்று மகிழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.