Wednesday, April 11, 2012

ஏப்ரல் 15, 2012

பாஸ்கா காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
அன்புக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் இந்த திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கிறோம். நாம் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய இறை இரக்கத்தின் ஞாயிறு திருவழிபாடு இயேசுவின் உயிர்ப்பை காணாமலே நம்பவும், கடவுளின் அன்பைப் பிறரோடு பகிர்ந்து வாழவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் கடவுள் மீதே சந்தேகம் கொண்டாலும், நமது பலவீனத்தை உணர்ந்தவராய் அவர் நமக்கு உதவிசெய்ய வருகிறார் என்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. கிறிஸ் துவில் வெளிப்பட்ட கடவுளின் இரக்கம் நிறைந்த அன்பை நாமும் பிறரோடு பகிர்ந்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகம்,
தொடக்க கிறிஸ்தவர்களின் அன்பும் பகிர்தலும் நிறைந்த வாழ்வைப் எடுத்துரைக்கிறது. முதல் கிறிஸ்தவர்கள் அனைவரும் இறை அனுபவம் பெற்றவர்களாய், தங்கள் உடைமைகளை பகிர்ந்து வாழ்ந்தனர். மற்ற மக்களிடையே நற்பெயரும் பெற்றிருந்தனர். அவர்களைப் போன்றதொரு சாட்சிய வாழ்வு வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், அன்பு வாழ்வு வாழ்வதைப் பற்றி
குறிப்பிடுகிறது. அன்புசெய்து வாழ்வதே கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்து வாழும் வாழ்வு என்று அன்பின் திருத்தூதர் யோவான் நமக்கு எடுத்து கூறுகிறார். தூய ஆவியார் வழியாக இறைமகன் இயேசுவில் முழுமையான நம்பிக்கை கொண்டு, அன்பில் வளரும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,
   உம் திருமகன் இயேசுவின் உயிர்ப்பை காணாமலே நம்பி ஏற்றுக்கொண்டிருக் கும் திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உமது சாட்சிகளாக வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் வேந்தராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ வாழ்வின் உண்மையான பொருளை உணர்ந்தவர்களாய், தியாகமும் அன்பும் நிறைந்த வாழ்வால் உமக்கு சான்று பகர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. தலைவர்களின் தலைவராம் இறைவா,
   எங்கள் நாட்டு மக்களை வழிநடத்தும் தலைவர்கள், மக்களிடையே ஒற்றுமையையும் அன்பையும் வளர்க்கவும், பிரிவினைகளை அகற்றவும், மக்களின் நல்வாழ்வுக்கு தேவை யான திட்டங்களை செயல்படுத்தவும்
அவர்களுக்கு நல்ல மனதினை வழங்க வேண்டு மென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. உதவிசெய்ய அழைப்பவராம் இறைவா,
   ஏழ்மை, தனிமை, வன்முறை, நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அன்பை இழந்து வாடும் மக்களிடையே, உமது அன்பின் கருவிகளாக செயலாற்றும் வரத்தினை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அளிக்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நன்மைகளின் நாயகராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், பகிர்தல் வாழ் வால் கிறிஸ்துவின் தியாகத்துக்கு சான்று பகரவும்,
ஒற்றுமையிலும் அன்பிலும் நாளும் வளரவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.