Wednesday, April 18, 2012

ஏப்ரல் 22, 2012

பாஸ்கா காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உண்மைக்குரியவர்களே,
   உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவின் உயிர்ப்பின் அனுபவத்தை முழுமையாக உணரவும், ஆண்ட வரின் உயிர்ப்புக்கு உண்மையான சாட்சிகளாக வாழவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. உண்மையை ஏற்க மனதின்றி நாம் கலக்கம் அடையும் வேளையில், கடவுள் நமக்கு தெளிவை வழங்குகிறார். திருச்சட்டமும் இறைவாக்கினரும் முன்னறிவித்த மெசியா இயேசுவே என்பதை உணர்ந்து, அவரது சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், நமது பாவங்களைப் போக்குவதற்காக
கடவுளின் திட்டப் படியே மெசியாவாகிய இயேசு துன்புற்றார் என்பதை எடுத்துரைக்கிறது. இயேசு மக்களால் தீர்ப்பிடப்பட்டு கொல்லப்பட்டாலும், தந்தையாம் கடவுள் அவரை உயிரோடு எழுப்பிய தற்கு தாங்களே சாட்சிகள் என்று திருத்தூதர் பேதுரு மக்கள் முன்பு சான்று பகர்கிறார். இயேசுவின் உயிர்ப்பை பிற சமயத்தினரும் ஏற்கும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், அனைத்துலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக விளங்கி இறைத்தந்தையிடம் பரிந்துபேசுபவர் இயேசுவே என்று
எடுத்து கூறுகிறது. இயேசுவின் கட்டளைகளை கடைபிடிப்போரிடமே கடவுளின் அன்பு நிறைவடைகிறது என திருத்தூதர் யோவான் நமக்கு தெளிவுபடுத்துகிறார். ஆண்டவர் இயேசு கற்பித்த இறையன்பையும், பிறரன்பையும் நமது வாழ்வில் கடைப்பிடித்து, இறைவனில் நிறைவு காண வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. இரக்கத்தின் ஊற்றாம் இறைவா,
   
இயேசுவின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டு, உமது சாட்சிகளாக வாழ்ந்து வருகின்ற திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தால் புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மேன்மைமிகு அரசராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் பிற சமயத்தினர் முன்னிலையில் உண்மையின் சாட்சிகளாக வாழ்ந்து, உமது அரசைக் கட்டியெழுப்ப கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உதவ வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் உருவாம் இறைவா,
   எங்கள் நாட்டு தலைவர்களும், சமூகத் தலைவர்களும் மக்களிடையே அன்பை விதைக் கவும், வேற்றுமையை அகற்றவும், தீமைகளை வேரறுக்கவும் தேவையான 
மன உறுதி யினை அவர்களுக்கு வழங்க வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,
   பயங்கரவாதம், வன்முறை,
கலவரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் துன்புறும் மக்களிடையே, உமது அன்பின் சாட்சிகளாக வாழும் வரத்தினை கிறிஸ்தவர்கள் அனை வருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உண்மையின் நிறைவாம் இறைவா,
   உமது சாட்சியாக வாழ அழைக்கப்பட்டுள்ள எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், எங்கள் சொற்களாலும், செயல்களாலும் உமக்கு சான்று பகரும் வகையில் உமது தூய ஆவியால் எங்களை வழிநடத்த
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.