Wednesday, April 4, 2012

ஏப்ரல் 8, 2012

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

திருப்பலி முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்தை வீழத்தி, வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வானதூதர்கள் சான்று பகர்ந்தனர். வெறுமையாக இருந்த கல்லறையும் சாட்சியாக இருந்தது. உயிர்த்த இயேசுவை நேரில் கண்ட திருத்தூதர்களும் மற்ற சீடர்களும் அவருக்கு சான்று பகர்ந்து அவருக்காக தங்கள் உயிரையே கையளித்தனர். உலக முடிவு வரை எந்நாளும் நம்மோடு இருப்பதாக வாக்களித்திருக்கும் உயிருள்ள இறைமகன் இயேசுவுக்கு உண்மையுள்ள சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைமக்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி திருத்தூதர் பேதுரு மக்களுக்கு பறைசாற்றிய நிகழ்வு இடம் பெறுகிறது. உயிர்த்த இயேசுவோடு உண்டு, குடித்த பேதுரு, வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் இயேசுவே நடுவராக இருப்பார் எனச் சான்று பகர்கிறார். இறை இயேசுவில் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவரும் நமது பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைமக்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், கிறிஸ்து அளிக்கும் நிலை வாழ்வினைப் பற்றி எடுத்து கூறுகிறது. இறைத்தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் இறைமகன் இயேசுவின் மாட்சியில் பங்குபெறுமாறு, அவரோடு நாம் சிலுவையில் இறந்துவிட்டோம் என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்து தரும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளுமாறு நாம் புனிதத்தில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. உயிர் அளிப்பவராம் இறைவா,
   உம் திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு தோன்றி வளர்ந்த திருச்சபை உலக மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்டு, புனிதமான மக்களை உமக்காக உருவாக்க வரமருள வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

2. வெற்றி வேந்தராம் இறைவா,
   திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உம் திருமகனின் உயிர்ப்பை பறைசாற்றும் உன்னத தூதுவர்களாக செய லாற்ற உதவ வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

3. மாட்சியின் மன்னராம் இறைவா,
   உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப் பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவ ருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கத்தின் நிறைவாம் இறைவா,
   பாவம், நோய், ஏழ்மை, வன்முறை, மதவெறி, தீவிரவாதம் போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கும் அனைவரும்,
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனைப் போல, புது வாழ்வுக்கு உயிர்த்தெழ உதவிபுரிய வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிர்ப்பின் நாயகராம் இறைவா,
   உமது அன்பில் ஒரே குடும்பமாக ஒன்றித்து வாழும் எங்கள் பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகனது சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்து, கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ வரம் தர வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.